சென்னை: தமிழ்நாட்டில் 18 வயது முதல் அனைவருக்கும் இலவச தடுப்பூசி போடுவதற்கான செலவை தமிழக அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார். தடுப்பூசி வழங்க இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் 18 முதல் 44 வயது மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும், இதற்கான செலவை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்கிறேன். இந்த நல்ல திட்டத்திற்கு தேவையான நிதி ஆதாரங்களை எப்படி பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முன் வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.