புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்த ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். எச்.டி.பி. என்ற தனியார் நிதி நிறுவனம் புதுக்கோட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நகைக்கடன், தனிநபர் கடன்களை வழங்கி வரும் இந்த நிறுவனத்தில் ஆண்டு தணிக்கை நடத்தியதில், சுமார் 305 சவரன் தங்க நகைகள் இருப்பில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், நகைகளை கையாடல் செய்ததாக நிதி நிறுவன ஊழியர்கள் மூவர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், நகைகளை கையாடல் செய்வதற்கு கிளை மேலாளர் உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், நகை மதிப்பீட்டாளர் சோலை மணி, கிளை மேலாளர் உமா சங்கர் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 91 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக நிதி நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றன. அடகு வைக்கப்பட்ட நகைகள் கையாடல் செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். புதுக்கோட்டை எச்.டி.பி. நிதிநிறுவனத்தில் திருடிய நகைகளை இன்டல் மணி நிறுவனத்தில் அடகு வைத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. கைதான 3 ஊழியர்களும் 305 சவரன் நகைகளை சிறிது சிறிதாக கையாடல் செய்து அடகு வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.