ஆரல்வாய்மொழி: குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் கன்னியாகுமரி கூட்டுறவு நூற்பாலை செயல்பட்டுவருகிறது. இங்கு 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 ஷிப்ட்களில் வேலை செய்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசு நிதியுதவியுடன் இந்த ஆலை நவீனமயமாக்கப்பட்டது. இந்த ஆலையில் காலை ஷிப்ட் தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டனர். பஞ்சு அரைத்து நூலாக திரிக்கும் பிரிவில் சுமார் 1500 கிலோ பஞ்சு அரைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது அதில் இருந்து புகை வந்தது. சற்று நேரத்தில் தீ மள மளவென பரவியது.
இதை கவனித்த தொழிலாளர்கள் மீன் இணைப்பை துண்டித்தனர். மற்ற பிரிவில் இருந்த தொழிலாளர்களும் ஓடி வந்து தீயணைப்பு கருவி பயன்படுத்தியும் தண்ணீர் ஊற்றியும் தீயை அணைத்தனர். திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீ பற்றியிருக்கலாம் எனத் தெரிகிறது. இந்த விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பஞ்சு எரிந்து சேதமடைந்தது.