×

இந்தியன் 2 பட தயாரிப்பு பிரச்னை இரு தரப்பும் கலந்துபேசி முடிவெடுங்கள்: இயக்குநர் ஷங்கர், லைகா நிறுவனத்துக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரச்னை தொடர்பாக, தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் இயக்குநர் ஷங்கர் தரப்பினர் கலந்து பேசி சுமுக தீர்வு காணுமாறு இரு தரப்பினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வக்கீல்,  2022ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்கு படத்திற்கு இயக்குனர் ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளார்.  வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் படத்தை முடித்து கொடுத்து விடுவார். தயாரிப்பு நிறுவனம் ஷங்கருக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது. அவற்றை திரும்பப் பெற வேண்டும். நடிகர் விவேக் இறந்து விட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளது. இந்த விவரங்களை மறைத்து தயாரிப்பு நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது என்று வாதிட்டார்.

லைகா நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல், இயக்குனர் ஷங்கருக்கு ஏற்கனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீத தொகையை வழங்க தயாராக இருக்கிறோம். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில் இன்னும் படத்தை முடிக்காததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.  இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விஷயத்தில் நீதிமன்ற உத்தரவு என்பது சுமுக தீர்வை ஏற்படுத்தாது. இரு தரப்பினரும் கலந்து பேசி சுமுக தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Shankar ,ICC ,Leica , Indian 2, Image Production Issue, Discuss, Decide, iCourt Advice
× RELATED இயக்குநர் சங்கரின் மகள் திருமண...