×

இரவு நேர ஊரடங்கு எதிரொலி: கரூரில் பல கோடி ரூபாய் ஜவுளி ஏற்றுமதி பாதிப்பு..! ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு

திருச்சி: இரவு நேர ஊரடங்கால் கரூரில் பல கோடி ரூபாய் ஜவுளி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய உற்பத்தி பொருட்கள் அனுப்ப முடியாததால் தேக்கமடைந்து வீணாகி வருகிறது. உணவகங்கள் மூடலால் உரிமையாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ெகாரோனா 2வது அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினமும் பாதிப்பு ஆயிரக்கணக்கில் உள்ளது. நேற்று புதிதாக 11,681 பேருக்கு கொரோனா தொற்ற கண்டறியப்பட்டது. சென்னையில் மட்டும் 3750 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த 2வது நாளாக நேற்றிரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்தது. காலையுடன் 4 மணியுடன் ஊரடங்கு நிறைவுக்கு வந்தது. இரவு நேர ஊரடங்கால் இரவு நேர உணவகங்கள் நடத்துவோர், ஓட்டல் உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் பெரும்பாலும் வெளிமாவட்டங்கள், மாநிலங்களுக்கு அரசு பஸ்களே இயக்கப்படுகிறது. இதனால் பல கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் வெளியூர்களுக்கு விவசாய உற்பத்தி பொருட்களை வெளியூர்களுக்கு லோடு அனுப்ப முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். விரைவில் வீணாகும், பூக்கள், பழங்கள், இலை போன்ற விவசாயிகள் பொருட்கள் வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தகவல் தெரியாத ஏராளமானோர் பேரூந்து நிலையம் வந்து, தகவல் அறிந்து பின்னர் ஏமாற்றத்துடன் வீடுகளை நோக்கிச் சென்றனர். 100க்கும் மேற்பட்டோர் விடிய விடிய பஸ்நிலையத்தில் காத்து கிடந்தனர். மேலும், வாகனங்கள் வருகை, விதிமுறை மீறல்கள் போன்றவற்றை கண்காணிக்கும் வகையில் கரூர் நகரம் மற்றும் மாவட்டம் முழுதும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கரூரில் உற்பத்தியாகும் ஜவுளி ரகங்கள், பார்சல் லாரிகள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக, இரவு நேரங்களில் வாகனங்களில் ஏற்றப்பட்டு, பார்சல் நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இரவு நேர ஊரடங்கு காரணமாக, ஜவுளி ரகங்களும் கடந்த இரண்டு நாட்களாக அதிகளவு தேங்கி கோடிக்கணக்கான ரூபாய் அளவில் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதே நிலையில்தான் கொசுவலை உற்பத்தியும் உள்ளது. மேலும், ஜவுளி நிறுவனங்களில் இரவு பணிக்கு தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்று வந்த நிலையில், பஸ் நிறுத்தம், இரவு நேர ஊரடங்கு காரணமாக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து தவித்து வருகின்றனர். புதுக்கோட்டையில் நேற்றிரவு ஊரடங்கால் இரவு நேர ஓட்டல், டீக்கடைகள் விற்பனை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கீரமங்கலம், கொத்தமங்கலம் பகுதிகளில் மல்லிகை பூ, கோழிக்கொண்டை உள்ளிட்ட பூக்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி பாதிக்கப்பட்டதால் பூக்கள் வீணானது. ஆலங்குடி, வடகாடு பகுதிகளில் பலாப்பழம் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் நேற்றிரவும் 9 மணிக்கே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. மேலும் பல்வேறு பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென ஆய்வு செய்த எஸ்பி தேஷ்முக் சேகர் சஞ்சய், இரவு 10 மணிக்கு பிறகு வெளியில் வந்த நபர்களை தடுத்து நிறுத்தி அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.

பின்னர் அவர் அளித்த பேட்டி: மாஸ்க் அணியாதது தொடர்பாக இதுவரை 1.87கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 92000 பேர் மீது வழக்கு பதிவு செ்யயப்பட்டுள்ளது. 2 நாட்களாக இரவு ஊரடங்கின் போது வெளியில் வரும் நபர்களிடம் அறிவுரை வழங்கி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். வரும் நாட்களில் இரவு நேரத்தில் வரும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றார். மேலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் பொதுமக்கள் சனிக்கிழமைகளில் அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக கூட்டம் கூட கூடாது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். இதேபோல் நாகை, திருவாரூர், ெபரம்பலூர், அரியலூர் மாவட்டங்களிலும் விவசாயிகள், போக்குவரத்து, ஓட்டல்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இரவு நேர தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.

Tags : Karur , Echo of night curfew: Textile exports worth crores of rupees in Karur ..! Thousands of workers lose their jobs
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்