×

கொரோனா தொற்றால் நெல்லையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

நெல்லை: கொரோனா தொற்றால் நெல்லையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டது. சுகாதார நிலைய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்பட 6 பேருக்கு கொரோனா உறுதியானதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டதை அடுத்து நோயாளிகள், கர்ப்பிணிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 491 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மாநகர பகுதிகளில் 244 பேருக்கும் , புறநகர் பகுதிகளில் 247 பேருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை நெல்லை மாவட்டத்தில் 2,789 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் திருநெல்வேலி அருகேயுள்ள கல்லூரில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவர், உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு அந்த மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்காக வந்துள்ளார். அந்த பெண்ணிற்கும், அவரது தாய்க்கும், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் என ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 25க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 2 மருத்துவர்கள், 2 மருத்துவ பணியாளர்கள், கர்ப்பிணியின் தாய் ஆகிய 5 பேருக்கும் தொற்று இருப்பது இன்று தெரியவந்தது. இதனையடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது. அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த 2 நபர்களில் ஒருவர் முக்க்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாய் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் மூடப்பட்டு தற்போது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

Tags : Corona ,Infestation Closing Government Early Health Centre ,Nellum , corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...