பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி மலைக்காடு பகுதியில் இளைஞர்களால் வளர்க்கப்பட்ட 8 வேப்பமரங்களை விறகுக்காக வெட்டிய பெண்ணிடம் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பள்ளிபாளையம் அக்ரஹாரம் ஊராட்சி மலைக்காடு பகுதியில், நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சேர்ந்து, வீதியோரம் வேப்ப மரக்கன்றுகளை நட்டு, வளர்ந்து வந்தனர். தற்போது அவை வளர்ந்து நிழல் தரும் மரங்களாக மாறிய நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், 8 மரங்களை வெட்டி விறகு கடைக்கு விற்பனை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த மரங்களை வளர்த்த இளைஞர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் கோட்டச்செயலாளர் சபரிநாதன் தலைமையில், பள்ளிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் சங்கரிடம் புகார் செய்தனர். தொடர்ந்து ஆர்டிஓ அனுமதி பெறாமல், 8 மரங்களை வெட்டி விறகு கடைக்கு விற்ற பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மற்றும் வருவாய்துறையினர், நேற்று சம்பவ இடத்திற்கு சென்று வெட்டப்பட்ட மரங்களை பார்வையிட்டனர்.மேலும், இதுகுறித்து அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.