விருதுநகர்: விருதுநகரில் ஏற்படுத்திய தெப்பத்தால் எப்போதுமே நிலத்தடி நீர் உள்ளது. ஆனால் நீர்நிலைகளை காக்க தவறியதால், மற்ற இடங்களில் நீர் மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு நிரந்தரமாக உள்ளது.விருதுநகரின் மையத்தில் 1866ல் வெட்டப்பட்ட தெப்பக்குளம் 330 அடி நீளம், 298 அடி அகலம், 21 அடி ஆழம் உடையது. தெப்பத்தின் மையத்தில் ஒரு மைய மண்டபமும், 3 கிணறுகளும் உள்ளன. 5.60 கோடி லிட்டர் கொள்ளவு உடைய தெப்பத்தில் மழைநீர் மட்டும் சேமித்து வைக்கப்படுகிறது. பலசரக்கு கடை மகமைத்தரப்பால் பராமரிக்கப்படும் தெப்பக்குளத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் பம்ப் செய்து சேமித்து வைக்கப்படுகிறது. மழைநீர் சேமித்து வைப்பதால் தெப்பத்தை சுற்றிய ஒரு கி.மீ சுற்றளவில் உள்ள வீடுகளின் போர்வெல்களில் தண்ணீர் பற்றாக்குறையின்றி கிடைக்கிறது.
தெப்பத்திற்கான மழைநீர் கடந்த 2006ல் சின்னமூப்பன்பட்டி கிராமத்திற்கு அருகில் 4.5 ஏக்கரில் வெட்டப்பட்டுள்ள குளத்தில் சேமித்து வைத்து பம்பிங் செய்து நிரப்புகின்றனர். கடந்த வாரம் 3 நாட்கள் தொடர்ந்து பெய்த மழைநீரை கடந்த சில தினங்களாக பம்பிங் செய்து நிரப்பி உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுவாக விருதுநகர் தெப்பக்குளத்தில் ேகாடைக்காலங்களில் 50 அடியில் நிலத்தடி நீர் இருக்கும். மற்ற காலங்களில் 10 அடியில் இருக்கும். இதுபோன்ற நீர் மேலாண்மையை மற்ற நீர்நிலைகளில் கடைபிடித்தால், நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் பெருகும். தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னையும் தீரும், என்றனர்.