திருவனந்தபுரம்: கேரளாவில் சூரிய ஒளி தகடு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சரிதா நாயர், இன்று காலை மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கோழிக்கோடு மாவட்டம் கசபா காவல் நிலைய போலீசார் திருவனந்தபுரம் சென்று சரிதா நாயரின் வீட்டில் வைத்து அவரை கைது செய்துள்ளனர். இன்றே கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றத்தில் சரிதா நாயர் ஆஜர்படுத்தப்படவுள்ளார். நிறுவனம் ஒன்றிக்கு சூரிய ஒளி தகடு பொருத்தித் தருவதாக கூறி 42 லட்சம் ரூபாய் மோசடி செய்தார் என்பது சரிதா நாயர் மீதான வழக்காகும். இவர் மீது கேரளா மட்டுமல்லாது கோவை உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் தொடர்ந்த பண மோசடி வழக்கில் கடந்த மாதமே தீர்ப்பு வெளியாவதாக இருந்தது. ஆனால் சரிதா நாயர் ஆஜராகாமல் இருந்ததால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். தொழிலதிபரும், முன்னாள் நடிகையுமான சரிதா நாயருக்கு எதிராக ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோழிக்கோடு நீதிமன்றங்களில் ஏற்கனவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சூரிய ஒளி தகடு மோசடி மட்டுமல்லாது கேரளாவில் சில முக்கிய அரசியல் தலைவர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தியவர் சரிதா நாயர் ஆவார்.