திருவனந்தபுரம்: கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது பல மாநிலங்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பு மருந்துகள் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். மே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பு மருந்தின் விலையை அதிகரித்து சீரம் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுபோன்ற காலகட்டங்களில் மத்திய அரசு தான் மாநிலங்களுக்கு மருந்துகளை வழங்க வேண்டும் என்றும் தடுப்பு மருந்து தயாரிப்பாளர்கள் மாநிலங்களிடம் பணம் கேட்பதும் முறையானது அல்ல என்றும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளா முழுவதும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். ஏற்கனவே உத்திரபிரதேசம், அசாமில் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அறிவித்துள்ள நிலையில் அந்த பட்டியலில் தற்போது கேரளமும் இணைந்துள்ளது. அதேபோன்று காங்கிரஸ் ஆளும் சட்டீஸ்கர் மாநிலமும் இலவசமாக தடுப்பூசி அளிக்கும் என்றும் அறிவித்துள்ளது. அதேவேளையில் மத்திய அரசு தேவையான அளவுக்கு தடுப்பு மருந்துகளை அளிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோன்று பீகார், மத்திய பிரதேச அரசுகளும் தடுப்பூசிகளுக்கு பணம் வாங்க போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.