டெல்லி : மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர் சீதாராம் யெச்சூரி. இவரின் மூத்த மகன் ஆஷிஸ் யெச்சூரி. 34 வயதான ஆஷிஸ் யெச்சூரி முன்னணி செய்தித்தாள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இதற்கிடையில், ஆஷிஸ் யெச்சூரிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி அருகே குருக்கிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் ஆஷிஸ் யெச்சூரி இன்று காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆஷிஸ் யெச்சூரி கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிகழ்வுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பை அறிந்து வருத்தமும், வேதனையும் அடைந்தேன். ஆஷிஷ் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. மகனை இழந்து வாடும் சீதாராம் யெச்சூரி குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் கேரள முதல்வர் பினராயி விஜயன், ஆஷிஷ் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் ஆஷிஷ் யெச்சூரியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் பினராயி விஜயன் தனது வருத்தங்களை தெரிவித்துள்ளார்.