ஜகர்தா: இந்தோனேஷியாவில் கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் 53 பேருடன் மாயமாகி உள்ளது. இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் கேஆர்ஐ நங்காலா 402. இது, 1980ம் ஆண்டில் இருந்து கடற்படையில் சேவையாற்றி வருகிறது. ராணுவ தலைவர்கள் முன்னிலையில் இன்று நடைபெற இருந்த நிகழ்ச்சி ஒன்றுக்காக இந்த நீர்மூழ்கி கப்பல் கடலில் ஏவுகணை பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. இதில், மொத்தம் 53 பேர் இருந்தனர். இந்நிலையில், பாலி தீவின் வடக்கே கடலில் திடீரென நீர்மூழ்கி கப்பல் காணாமல் போனது. இதனை தொடர்ந்து கப்பலை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவிடம் இருந்து நீர்மூழ்கி மீட்பு கப்பல் உதவியை இந்தோனேஷியா நாடியுள்ளது.