×

களக்காடு அருகே வீடுபுகுந்து பெண் குழந்தையை கொன்ற டிரைவர் குண்டர் சட்டத்தில் கைது

களக்காடு: களக்காடு அருகே வீடுபுகுந்து பெண் குழந்தையை கொடூரமாக கொலை செய்து, போதகர் அவரது மனைவியை அரிவாளால் வெட்டிய டிரைவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டம் ரோஸ்மியாபுரம் சுடலை ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் சிவசங்கரன் (28). கார் டிரைவரான இவர், திருக்குறுங்குடி தெற்கு மகிழடியை சேர்ந்த கிறிஸ்தவ போதகர் ரசூல்ராஜ் (58) மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாக பணிபுரிந்து வருகிறார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பிய சிவசங்கரன் அவரது தந்தையான ரசூல்ராஜிடம் சென்று பெண் கேட்டுள்ளார். ஆனால் ரசூல்ராஜ் பெண் கொடுக்க மறுத்து விட்டார். இதனைதொடர்ந்து ரசூல்ராஜ் குடும்பத்தினர் மீது சிவசங்கரனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில் சிவசங்கரன் கடந்த மார்ச் மாதம் 20ம்தேதி அதிகாலையில் ரசூல்ராஜ் வீட்டுக்குள் புகுந்து, ரசூல்ராஜ், அவரது மனைவி எப்சிபாய் (52). இவர்களது மூத்த மகள் ஏஞ்சல் நலதன்-ஆனந்த் செர்லின் தம்பதியினரின் 8 மாத பெண் குழந்தையான அக்ஷா குயின்சி ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

தகவலறிந்து வந்த திருக்குறுங்குடி போலீசார்  ரத்த வெள்ளத்தில் கிடந்த ரசூல்ராஜ் உள்பட 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் 8 மாத குழந்தை அக்ஷா குயின்சி பரிதாபமாக உயிரிழந்தது. போதகர் ரசூல்ராஜ், அவரது மனைவி எப்சிபாய்க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிவசங்கரனை போலீசார் கைது செய்தனர். இதனிடையே சிவசங்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிற்கு பரிந்துரை செய்தார்.

இதனை ஏற்று, சிவசங்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ள சிவசங்கரன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார்.

Tags : Kalakkadu , Kalakkadu, girl child, driver, arrested
× RELATED சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு