சென்னை: தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று (ஏப்ரல் 21) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், திருப்பூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
நாளை (ஏப்ரல் 22) மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு எட்டயபுரம் (தூத்துக்குடி) 3 செ.மீ., தருமபுரி, ஏலகிரி (திருப்பத்தூர்) தலா 2 செ.மீ. என பதிவாகியுள்ளது.