*இது உங்க ஏரியா
பேராவூரணி : பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயில் அருகே சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேராவூரணி பேரூராட்சி, பெரியார் முதன்மை சாலையில், நீலகண்ட பிள்ளையார் கோயில் முன் மழைநீர் தேங்கி நிற்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால் தண்ணீர் வழிந்தோட வழியின்றி தேங்கி கிடக்கிறது. இவ்வழியாக கடைவீதி, வாரச்சந்தைக்கு வரும் வாகன ஓட்டிகள், தண்ணீர் தேங்கி நிற்கும் நிலையில், பள்ளம் இருப்பது தெரியாமல், தடுமாறி கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது.
மேலும், பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் கடந்து செல்லும் போது, தேங்கி நிற்கும், அழுக்கடைந்த தண்ணீர் தெறித்து சாலையில் செல்வோர் ஆடைகளை பாழ்படுத்துகிறது. தண்ணீர் தேங்கி கிடப்பதால், எதிரில் கனரக வாகனங்கள் வரும்போது, இருசக்கர வாகன ஓட்டிகள் எந்தப் பக்கமாக ஒதுங்குவது என புரியாமல் நிலைகுலைந்து விடுகின்றனர். தண்ணீர் தொடர்ந்து தேங்கி கிடக்கும் நிலையில், துர்நாற்றம் வீசுவதோடு, கொசுக்கள் உற்பத்தியாகி, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.
இதனால், அருகில் உள்ள கடைக்காரர்கள், சந்தைக்கு வரும் பொதுமக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்கள், அவ்வழியாக பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.எனவே, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்ணீர் தேங்கி நிற்காத வகையில், சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.