திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வருபவர்கள் மாஸ்க் அணியாமலும், சமூக இடைவெளியின்றி வரிசையில் நிற்கின்றனர். இதனால் அப்பகுதியில் கொரோனா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் கொரானோ இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே மாஸ்க் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவில்லிபுத்தூர் அம்மா உணவகத்தில் தினமும் 200க்கும் மேற்பட்டோர் சாப்பிட்டும், பார்சல் வாங்கியும் செல்கின்றனர்.
ஆனால் உணவகத்திற்கு வரும் ஒருவர் கூட மாஸ்க் அணிவதில்லை. மேலும் சமூக இடைவெளியை பின்பற்றாமல் வரிசையில் அருகருகே நிற்கின்றனர். பெரும்பாலும் ஏழை மக்களும், முதியவர்களும் தான் அதிகம் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். அப்போது தான் இரண்டாம் அலையில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: அம்மா உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாததால் அலட்சியம் செய்கின்றனர்.
டாஸ்மாக்கில் மாஸ்க் அணிந்து வந்தால் தான் சரக்கு சப்ளை என அரசு அறிவித்துள்ளது. ஆனால் உணவகத்திற்கு மக்கள் மாஸ்க் அணியாமல் வருகிறார்கள். எனவே உணவகத்திற்கும் கட்டாய மாஸ்க் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,என்றனர்.