மும்பை: பாலிவுட் நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா உறுதியான நிலையில், அவரது இரு குழந்தைகளுக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அவரது கணவர் தொற்று அறிகுறியுடன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எனது 5 வயது மகன் ஹான்ஸ் மற்றும் 2 வயது மகள் நைரா ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனது கணவர் அக்ஷய் வர்டேவும் கொரோனா அறிகுறியால் தனிமைப்படுத்திக் கொண்டார்.
கடந்த வாரம் ஹான்சுக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்று பிரச்னை போன்றவற்றால் சோர்வாக இருந்தான். சுமார் நான்கு நாட்களுக்கு பின், அவனுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. ஆரம்பத்தில் பதற்றமாக இருந்தேன். ஆனால் தற்போது மனதை பலப்படுத்திக் கொண்டுள்ளேன். இரண்டாவது அலையானது நிறைய குழந்தைகளை பாதிக்கிறது. எனவே, உங்கள் குழந்தைகள் கொரோனா அறிகுறியற்றவர்களாக இருந்தாலும் கூட, அவர்களை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நாங்கள் மருத்துவர்களின் ஆலோசனைபடி சில சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறோம். நீராவி பிடித்தல், பிராணாயாமா, சுவாச பயிற்சிகள் மற்றும் சத்தான உணவுகளை பின்பற்றி வருகிறோம். இந்த நேரத்தில் புத்திசாலித்தனமாக செயல்படுவது முக்கியம். அதனால் பயப்பட வேண்டாம். அதே நேரத்தில் உங்களையும் மற்றவர்களையும் பாதுகாக்க கவனித்துக் கொள்ளுவது தான் ஒரே வழி’ என்று தெரிவித்துள்ளார்.