டெல்லி: மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனிமைப்படுத்தி கொண்டார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, டெல்லியில் 5 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 23,686 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 240 உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், மாநில முதல்வர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என முக்கிய தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். கடந்த மாதம் மார்ச் 4-ம் தேதி டெல்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது பெற்றோர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.