தரங்கம்பாடி : மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதியில் உளுந்து பயறு அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தரங்கம்பாடி பகுதியில் பொறையார், காட்டுச்சேரி, திருக்களாச்சேரி, சங்கரன்பந்தல், எரவாஞ்சேரி, நல்லாடை, திருவிளையாட்டம், ஈச்சங்குடி, மேமாத்தூர், கொடவிளாகம், நரசிங்கநத்தம், தில்லையாடி, திருவிடைகழி, அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், பத்துக்கட்டு, வேலம்புதுகுடி, நீலவேலி, கொத்தங்குடி, அரும்பாக்கம், குரும்பக்குடி, கலசம்பாடி, கருப்பூர், குமாரமங்கலம், கடலி, சாமியாகுன்னம், உள்ளிட்ட கிராமங்களில் உளுந்து, பச்சை பயறு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
ஆடுதுறை 3, ஆடுதுறை 5, வம்பன் 6, மற்றும் நாட்டு உளுந்துகளை விவசாயிகள் சாகுபடி செய்திருந்தனர். சம்பா சாகுபடி அறுவடைக்கு 7 நாள் முன் உளுந்து பயறு விதைகளை வயல்களில் தெளிப்பார்கள். அதன் பின் 70ல் இருந்து 75 நாட்களுக்குள் அறுவடை பணி துவங்கும்.
இப்பொழுது அனைத்து கிராமங்களிலும் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. அறுவடை செய்யும் தொழிலாளிகளுக்கு பல கிராமங்களில் அறுவடை செய்ததில் 6ல் ஒரு பங்கு கூலியாக வழங்கப்படுகிறது. மற்ற சில இடங்களில் ஒரு ஏக்கர் அறுவடை செய்ய 1800 கூலியாக வழங்கப்படுகிறது. பயறு குவிண்டால் ரூ.6800க்கும், உளுந்து குவிண்டால் ரூ.6700க்கும் வியாபாரிகள் வாங்குகின்றனர்.