×

அரசியல் வேறுபாடுகள் கடந்து கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் : எல்.முருகன் வேண்டுகோள்!!

சென்னை : கொரோனா பேரிடர் காலத்தில் அரசியல் வேறுபாடுகள் கடந்து மக்களுக்காக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா முதல் அலை பாதிப்பில் இருந்து மக்களை காக்க தமிழக பாஜக மிக சிறப்பாக பணியாற்றியது. இதை மக்கள் நன்கு அறிவார்கள். உணவு அளித்தல், முகக்கவசம் வழங்குதல் ,மோடி கிட் என்று சொல்லக் கூடிய உணவுப் பொருட்கள் வழங்குதல், ஏழை எளிய மக்களுக்கு உணவு தயாரித்து வழங்குதல் உள்ளிட்ட பல பணிகளை சிறப்பாக பாஜகவினர் செய்து முடித்தனர்.

இந்த சூழலில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் பல முக்கிய கடமைகளை நாம் ஆற்ற வேண்டி இருக்கிறது. தடுப்பூசி போடுவதற்கு வழிகாட்டுவது, கபசுரக் குடிநீர் அனைவருக்கும் வழங்குவது, வழிகாட்டு உதவி மையங்கள் அமைப்பது , பாதிப்பில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்வது ,அனைவருக்கும் முகக் கவசங்கள் வழங்குவது உள்ளிட்ட பல முக்கிய பணிகளை நாம் உடனடியாக செயல்படுத்த வேண்டும் .

பாஜக தொண்டர்களும் சேவை மனப்பான்மை மீண்டும் தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அனைவரும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட வேண்டும் .பிரதமர் மோடி கொரோனா பாதிப்பிலிருந்து நம் நாடு முற்றிலும் விடுபட பல்வேறு பெரும் முயற்சிகளை எடுத்து வருகிறார். அவருடைய முயற்சிகள் யாவும் வெற்றி பெறும் வகையில் அனைவரும் அரசியல் வேறுபாடுகளை கடந்து இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்” என்று வலியுறுத்தியுள்ளார்

Tags : Corona ,L. Murugan , எல்.முருகன்
× RELATED நீலகிரியில் வாழும் பழங்குடியின...