×

திருப்பதி கோயில்களில் பக்தர்கள் தரிசிக்க தடை....தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நாள்தோறும் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகபட்சமாக சித்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ₹300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோயிலில் நடைபெறும் நித்ய கைங்கரியங்கள் அனைத்தும் பக்தர்களின்றி நடத்தப்படும்.

 அதேபோல், கோதண்டராம சுவாமி கோயிலில் ராமநவமியை முன்னிட்டு வருகிற 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உற்சவங்கள் மட்டும் நடத்தப்படும். 19ம் ேததி (இன்று) வருடாந்திர புஷ்பயாகம், 22ம் தேதி சீதாராம திருக்கல்யாணம், 23ம் தேதி ராமர் பட்டாபிஷேகம் ஆகியவற்றிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூ.300 தரிசன டிக்கெட் குறைப்பு
கொரோனா பரவல்  காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ₹300 தரிசன டிக்கெட் தினமும் 20 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 5 ஆயிரம் டிக்கெட்டுகள் குறைக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Tags : Tirupati , Tirupati Temple, Devotees, Devasthanam
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு...