யாங்கூன்: மியான்மரில் பாரம்பரிய புத்தாண்டை முன்னிட்டு சிறையில் இருந்த 23,047 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 தேதி ஜனநாயக ரீதியிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மேலும், அரசு ஆலோசகர் ஆங் சாங் சூகி, அதிபர் வின்மெயின்ட் உள்பட முக்கிய தலைவர்கள் பலர் சிறை வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து மீண்டும் ஜனநாயக ஆட்சியை அமல்படுத்தக்கோரி அங்கு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் இதுவரையில் 728 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. மேலும் 3,141 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், மியான்மரில் பாரம்பரிய புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு, சிறையில் உள்ள கைதிகளுக்கு ராணுவ ஆட்சியாளர்கள் பொது மன்னிப்பு வழங்கி இருக்கின்றனர்.
அதன்படி, மியான்மரில் இருந்து நாடு கடத்தப்பட்ட 137 வெளிநாட்டினர் உட்பட சிறைகளில் இருந்து மொத்தம் 23,047 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரது தண்டனையை குறைத்து ராணுவ மூத்த தலைமை ஜெனரல் அங்ஹலெய்ங் உத்தரவிட்டுள்ளார்.