புதுடெல்லி: கொரோனா அச்சுறுத்தல் சூழலை எதிர்கொள்வதற்கான பல்வேறு முக்கிய ஆலோசனைகளை தெரிவித்து, பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறியிருப்பதாவது: கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டத்தின் முக்கியமான விஷயம் தடுப்பூசியாகும். எனவே, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். கொரோனா பரிசோதனைகளை விட அதிகரிப்பதை விட, தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் சதவீதத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் தற்போது சிறு பகுதியினருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சரியான கொள்கை வடிவமைப்பின் மூலமாக, மேலும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை சிறப்பாகவும், விரைவாகவும் செய்ய முடியும். கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு நாம் பல்வேறு வழிமுறைகளை கையாளலாம். ஆனால், அதில் முக்கியமான ஒன்று தடுப்பூசி போடுவதை விரைவுப்படுத்த வேண்டும்.