நாகர்கோவில்: கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீது மும்பை நோக்கி சென்ற வெளிநாட்டு சரக்கு கப்பல் மோதியது. விசைப்படகில் இருந்த 14 மீனவர்களும் இந்த விபத்தில் சிக்கினர். விசைப்படகில் குளச்சலை சேர்ந்த 2 மீனவர்கள், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த 7 மீனவர்கள் இருந்தனர். இதில் ராமநாதபுரத்தை சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனில்தாஸ் ஆகியோர் உயிரோடு மீட்கப்பட்டனர்.
குளச்சல் மீனவர்கள் அலெக்சாண்டர், தாசன் மற்றும் மேற்குவங்கத்தை சேர்ந்த மாணிக்தாஸ் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இதில் குளச்சல் மீனவர்கள் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. 9 மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இ்தில் மேலும் 3 பேரின் உடல்கள், கப்பல்படையின் உதவியுடன் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மீட்கப்பட்டதாக தெரிகிறது. உடல்கள் மோசமான நிலையில் உள்ளதால் அவர்கள் யார் என்று அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கப்பல் மோதிய விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நேற்றும் தேடுதல் தொடர்ந்து நடைபெற்றது.