மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை உற்பத்தி செய்து வருகிறது. தற்போது, இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளிலும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவாலா நேற்று கூறுகையில், `‘அரசு மற்றும் அதிகாரிகள் தொடர்பான இடையூறுகளால் தேவையான அளவுக்கு தடுப்பூசிகளை அனுப்புவதில் சீரம் நிறுவனம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது,’’ என்றார்.
பின்னர், டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் தனது பதிவில், ‘அமெரிக்க அதிபர் அவர்களே, நாம் அனைவரும் ஒருங்கிணைந்து கொரோனா தொற்றை ஒழிக்க வேண்டுமென்றால், கொரோனா தடுப்பூசி தயாரிப்புக்கான மூலப்பொருட்களின் ஏற்றுமதிக்கு நீங்கள் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு ெவளியே உள்ள தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம், தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும்,’ என கூறியுள்ளார்.