புதுடெல்லி: நாடு முழுவதும் செக் மோசடி தொடர்பாக 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால், கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து இது பற்றி வழக்குப்பதிவு செய்தது. இது குறித்து 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி சிறப்பு நீதிபதிகள் குழுவையும் அமைத்தது. சமீபத்தில், உச்ச நீதிமன்றத்தில் இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகள் வருமாறு:
* ஒரு வருடத்துக்கு மேலாகி விட்ட செக் மோசடி வழக்கின் விசாரணைகளை ஒருங்கிணைத்தும் நடத்த வேண்டும்.
* எட்டு வார அவகாசத்துக்குள் வழக்கை முடிக்க வேண்டும்.
* இதற்காக, நாடு முழுவதும் கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.
* வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான அமர்வு, செக் மோசடி வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என இந்த பரிந்துரைகளின் அடிப்படையில் உத்தரவிட்டது.