×

ஆன்லைன் மூலம் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்

கிருஷ்ணகிரி, மார்ச் 28:  ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம் என விதை ஆய்வு துணை இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தர்மபுரி விதை ஆய்வு துணை இயக்குநர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காய்கறி பயிர்கள் பெருமளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறை மூலம் வழங்கப்படும் விதை விற்பனை உரிமம் பெற்ற, விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும். இதனை தவிர்த்து ஆன்லைன் மூலமாகவோ, தனிநபரிடமோ அல்லது விதை விற்பனை உரிமம் பெறாத நிறுவனத்திலோ விதைகளை வாங்க வேண்டாம். ஆன்லைன் மூலமாக வாங்கப்படும் விதைகளினால் ஏற்படும் பயிர் பாதிப்பிற்கோ அல்லது இழப்பிற்கோ எவ்வித இழப்பீடும் பெற இயலாது என தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தனிநபர்கள் மூலம் நேரடியாக நாற்றுப்பண்ணைகளுக்கு மற்றும் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் விதைகளுக்கு, உரிய ரசீது அளிக்கப்படாததால், இவ்விதைகள் நம்பகத்தன்மை இல்லாமல், மறைமுகமாக போலி விதைகளை வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளது. எனவே, இதனைத் தவிர்த்து விவசாயிகளும், நாற்றுப் பண்ணை உரிமையாளர்களும் விதை உரிமம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். விவசாயிகள் அதிக மகசூல் பெற பருவத்திற்கு ஏற்ற விதைகளை மட்டுமே பயிர் செய்ய வேண்டும் எனவும், விவசாயிகள் விதைகளை வாங்கும்போது நாள், விவசாயியின் பெயர், பயிர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவை அடங்கிய ரசீதை கையொப்பம் இட்டு தவறாமல் கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது….

The post ஆன்லைன் மூலம் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Seed ,Dinakaran ,
× RELATED தடுப்பு கம்பிகளுக்கு வர்ணம் பூசும் பணி