தூத்துக்குடி: தூத்துக்குடி போல்டன்புரத்தில் உள்ள தியேட்டரில், தனுஷ் நடித்த ‘‘கர்ணன்’’ படம் திரையிடப்பட்டு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு 2வது காட்சி துவங்கியது. படம் துவங்கிய சிறிது நேரத்தில் 5 வாலிபர்கள் போதையில் தியேட்டருக்கு வந்தனர். அப்போது செக்யூரிட்டிகள், போதையில் இருந்த 5 பேரையும் சினிமா பார்க்க அனுமதி மறுத்துள்ளனர். இதனால், 5 பேரும் தியேட்டரை விட்டு வெளியே சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து தியேட்டர் வளாகத்திற்குள் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
இந்த குண்டு பயங்கர சத்தத்துடன் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதுதொடர்பான புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வந்து பார்வையிட்டனர். மேலும் வழக்கு பதிவு செய்து இருவரை பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.