×

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்ப வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா தொற்றுப் பரவலின் இரண்டாவது அலை ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில், தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49,985 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 6,984 பேர் பாதிக்கப்பட்டு, சென்னை, செங்கல்பட்டு, கோவை, காஞ்சிபுரம், மதுரை, திருவள்ளூர், திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கொரோனா தொற்று அதி வேகமாகப் பரவி வருவதாக தமிழக அரசின் புள்ளிவிவரங்களே தெரிவிக்கின்றன.

இரண்டாவது அலை தாக்குதல் இவ்வளவு படுமோசமாக நம் மாநிலத்திற்கு மட்டுமின்றி, நாட்டிற்கும் பாதிப்பு ஏற்படுத்தியிருப்பதற்கு மத்தியில் உள்ள பாஜ அரசின் அலட்சிய மனப்பான்மையும், அஜாக்கிரதையான நிர்வாகமுமே காரணம். தடுப்பூசிகளை உரிய நேரத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வராதது, நம் மக்களுக்குப் பயன்பட வேண்டிய சுமார் 5.84 கோடி தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என கொரோனா முதல் அலை தாக்குதலில் காட்டிய மெத்தனத்தை விட அதிக பொறுப்பின்மையை இந்த முறையும் மத்திய அரசு காட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் 35.67 லட்சம், இரண்டாவது டோஸ் 4.53 லட்சம் என்ற அளவில் மொத்தம் 40.21 லட்சம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை இணைய தளத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தடுப்பிற்கு இது எப்படி போதுமானதாக இருக்கும். ஏன் அதிமுக அரசு அதிக தடுப்பூசிகளை கேட்டுப் பெறவில்லை. அனைவருக்கும் தடுப்பூசி போடும் நோக்கில் சப்ளை செய்வதற்குப் பதில் மாநிலத்தில் போடப்படும் தடுப்பூசியின் அடிப்படையில்தான் சப்ளை என்று மத்திய அரசு முடிவு எடுத்திருந்தால், அது எவ்வளவு மோசமான மக்கள் விரோத முடிவு, ஏன் இதை அதிமுக அரசு எதிர்க்கவில்லை?.

இது மாதிரி, தமிழ்நாட்டிற்கு தடுப்பூசி சப்ளை செய்வதில் அறிவியல் பூர்வமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மக்களின் உயிரோடு நடத்தும் விபரீத விளையாட்டாகும். கடந்த 8ம் தேதி தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு செய்த பிரதமர் நரேந்திர மோடி, தடுப்பூசி குறித்து இன்னும் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனுமதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் விரைந்து தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் என தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிமுக அரசு மட்டுமல்ல, மத்திய அரசும் தோல்வியடைந்து விட்டது என்பதை இது காட்டுகிறது.

எனவே, கொரோனா தொற்று தமிழ்நாட்டில் வேகமாகப் பரவி, மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பி வழியும் சூழ்நிலை உருவாகியுள்ள இந்த நேரத்தில், அனைவருக்கும் தடுப்பூசி என்ற கொள்கை முடிவினை எடுத்து தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை தாமதமின்றி போர்க்கால அடிப்படையில் அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய அரசை, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன். தமிழக அரசு அதிகாரிகளும் போதிய விழிப்புணர்வை இப்போதாவது ஏற்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி போடுவதில் முனைப்புடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலை தாக்குதலில் காட்டிய மெத்தனத்தை விட அதிக பொறுப்பின்மையை இந்த முறையும் மத்திய அரசு காட்டிக் கொண்டிருக்கிறது.

Tags : MK Stalin , As the corona spreads rapidly, the federal government must send the necessary vaccines: MK Stalin insists
× RELATED இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு...