×

மதுரவாயல் பை பாஸ் சாலையில் துணிகரம் லிப்ட் கேட்பதுபோல் வழிப்பறி: இளம்பெண் உள்பட 4 பேர் கைது

பூந்தமல்லி: லிப்ட் கேட்பதுபோல் நடித்து வழிப்பறியில் ஈடுபட்ட இளம்பெண் உட்பட 4 பேரை, போலீசார் கைது செய்தனர். திருப்போரூரை சேர்ந்தவர் கணேஷ் (27). நேற்று முன்தினம் கணேஷ், தனது சொந்த வேலை விஷயமாக சென்னைக்கு பைக்கில் சென்றார். பின்னர் அங்கிருந்து திருப்போரூர் புறப்பட்டார். மதுரவாயல் பை பாஸ் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது இளம்பெண் ஒருவர் லிப்ட் கேட்டு கையை காட்டி வழி மறித்தார்.

இதை பார்த்த கணேஷ், பைக்கை ஓரமாக நிறுத்தினார். உடனே, அங்கு மறைந்திருந்த 3 வாலிபர்கள் வேகமாக ஓடிவந்து கணேஷை மிரட்டி அவரிடம் இருந்த பணம், செல்போனை பறித்துள்ளனர். அப்போது அவர்கள் 3 பேரும், இளம்பெண்ணின் கூட்டாளிகள் என அவருக்கு தெரிந்தது. இதையடுத்து, கணேஷ் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்து, 4 பேரையும் மடக்கி பிடித்தனர். தகவலறிந்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, இளம்பெண் உள்பட 4 பேரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

அதில், மதுரவாயல் அபிராமி நகரை சேர்ந்த முத்துக்குமார் (25), உதயகுமார் (19), நெற்குன்றம் மேட்டுக்குப்பம் முத்துலட்சுமி (25), பரசுபாலன் (19) என தெரிந்தது. மேலும் விசாரணையில், முத்துலட்சுமி பைக்கில் தனியாக செல்பவர்களிடம் லிப்ட் கேட்பதுபோல வழிமறித்து நிறுத்துவார். அங்கு மறைந்திருக்கும் மற்ற 3 பேரும் சேர்ந்து வாகனத்தில் வருபவரை மிரட்டி பணம் மற்றும் செல்போன், நகை ஆகியவற்றை பறித்து கொள்வார்கள் என தெரிந்தது. இதையடுத்து போலீசார், வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags : Maduravayal Bypass Road , 4 arrested including teenager
× RELATED சென்னையில் மதுரவாயல் சாலையில்...