×

திருச்செங்கோடு அருகே கொடூர சம்பவம் 2 ஆண்டுகளாக சிறுமி பலாத்காரம் அதிகாரி உட்பட 11 பேர் கைது: குழந்தைகள் நல அமைப்பு புகாரில் நடவடிக்கை

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே 14 வயது சிறுமியை 2 ஆண்டாக 12 பேர் கும்பல் மிரட்டி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு அதிகாரி உள்ளிட்ட 11 பேரை போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, 6ம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு 2 அக்கா, ஒரு தம்பி உள்ளனர். அக்காக்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசிக்கின்றனர். சிறுமியின் தாய் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதனால் சிறுமி, அருகிலுள்ள வீடுகளில் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துகிறார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சிறுமி மிகவும் சோர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தார். இது குறித்து அவரது அக்கா விசாரித்தபோது சிறுமியை 12 பேர் கும்பல் மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. இதுபற்றி அவரது அக்கா, சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதா சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அதில்,`சிறுமியை கடந்த 2 ஆண்டாக கூலித்தொழிலாளிகள் முதல் அரசு அதிகாரி வரை 12 பேர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. தாய் மன நலம் பாதிக்கப்பட்டிருந்ததை சாதகமாக்கிக்கொண்ட அக்கும்பல் தங்கள் இச்சையை சிறுமியிடம் தொடர்ந்து தீர்த்து வந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல அமைப்பினர், திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மத்திய அரசு அதிகாரி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிந்து, மத்திய அரசு அதிகாரி கண்ணன்(35), மூத்த அக்கா கணவர் சின்னராசு (32), குமார் (29), வடிவேல் (29), பன்னீர் (32), மூர்த்தி(55), நாய் சேகர்(25), கோபி(32), அபி(37), சரவணன்(30), சங்கர்(24) ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டனர். முருகேசன் என்பவரை தேடி வருகின்றனர். நாமக்கல் ஏடிஎஸ்பி ரவிகுமார் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், கைது செய்யப்பட்ட 11 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, நாமக்கல் அருகே குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்களுக்கு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tiruchengode ,Child Welfare Organization , 11 arrested for raping a girl for 2 years near Tiruchengode: Child Welfare Organization
× RELATED நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்