சென்னை: இதயம் மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்கு 3 பேருக்கு நிவாரணம் கேட்டு டி.ஆர்.பாலு எழுதிய கடிதத்துக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘‘பல்லவரம் வினோபாஜி நகரை சேர்ந்த சம்சுகனியின் மகன் யூசப் மற்றும் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த ஹரி பிரசாத்தின் மூன்று வயது குழந்தை ராகா ரக்சனா ஆகியோர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கள்ளிக்குப்பம், அம்பத்தூரை சேர்ந்த குமாரின் மகன் அரவிந்தன் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் மூவருக்கும், உதவி அளிக்க கேட்டுக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில்: பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து யூசப் மற்றும் குழந்தை ராகா ரக்சனா ஆகியோரின் இதய நோய் சிகிச்சைக்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு வழங்கப்படும். அரவிந்தனின் புற்று நோய் சிகிச்சைக்காக ரூ.3,00,000 கிறிஸ்டியன் மெடிக்கல் மருத்துவமனைக்கு வழங்கப்படும். இதய நோய் அறுவை சிகிச்சைக்காக ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் மற்றும் ரூ.3,00,000 புற்று நோய் சிகிச்கைக்காக கிறிஸ்டியன் மெடிக்கல் மருத்துவமனைக்கும் உடனடியாக அனுப்பி வைக்கப்படும். என்று கூறப்பட்டுள்ளது.