காளையார்கோவில்:காளையார்கோவில் அருகே பழைய ஆயிரம் ரூபாய் நோட்டு ரூ.4.80 கோடியை மாற்ற முயன்ற சம்பவத்தில் அக்கா, தம்பி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். செங்கல்பட்டை சேர்ந்தவர் சுரேஷ் குமார் மனைவி வரலட்சுமி (45) தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரிடம் ஏராளமான பழைய 1,000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனை மாற்றி தருவதாக கூறி சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வளையம்பட்டி கிராமத்தை சேர்ந்த அருள் சின்னப்பன் (43) கூறியுள்ளார். இதனை நம்பிய வரலட்சுமி, நேற்று செங்கல்பட்டிலிருந்து தனது தம்பி அசோக்குமாருடன் ரூ.4.80 கோடியை எடுத்துக்கொண்டு வளையம்பட்டி வந்துள்ளார்.
இதுபற்றிய தகவல் காளையார்கோவில் போலீசாருக்கு கிடைத்தது. போலீசார் ரகசியமாக நோட்டமிட்டதில் வரலட்சுமி, அவரது தம்பி அசோக்குமார், அருள் சின்னப்பனை பிடித்தனர். அவர்களிடம் சிவகங்கை எஸ்பி ராஜராஜன் விசாரணை நடத்தி வருகிறார். எஸ்பி ராஜராஜன் கூறுகையில், ‘‘கைதான சின்னப்பன் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவருடன் சேர்ந்து இருவர் கைது செய்யப்பட்டனர் இவர்களிடமிருந்து ரூ.4.80 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களுக்கு வேறு ஏதேனும் குற்றச்சம்பவங்களில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்’’ என்றார்.