×

தகிக்கும் வெயிலுக்கு இடையே தமிழ்நாட்டின் சில இடங்களில் மழை: மக்கள் மகிழ்ச்சி

உளுந்தூர்பேட்டை: தகிக்கும் கோடை வெயிலுக்கு இடையே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான வடகுறும்பூர், நெய்வானை கூவாடு,  மலையனூர், வண்டிப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது. வடகுறும்பூர் கிராமத்தில் மையப்பகுதியில் தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் தீப்பிடித்து எரிந்ததால் பதற்றம் ஏற்பட்டது. திருச்சி மாநகரில் இன்று காலை 6.50 மணியளவில் மிதமாக தொடங்கி, காலை 7.30 மணி வரை பலத்த மழை பெய்தது.

திருச்சி விமான நிலையப் பகுதியில் 7.5 மில்லி மீட்டரும், திருச்சி நகரில் 4 மில்லி மீட்டரும் மழை பதிவாகியது. இந்த மழையால், கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமையால் வாடி வதங்கிய மாநகர மக்கள், குளிர்ச்சியான சூழலை அனுபவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுமார் 40 நிமிடங்களாக கொட்டி தீர்த்த கோடை மழையால் மக்கள் மிகிழ்ச்சி அடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் நகரம் சேந்தன்குடி கொத்தமங்கலம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.

சென்னையிலும் சில இடங்களில் திடீர் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். திடீரென கொட்டிய மழையால் விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.


Tags : Tamil Nadu , Rain in some parts of Tamil Nadu amidst scorching sun: People are happy
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...