ஸ்ரீநகர்: காஷ்மீரில் ராணுவ வீரரை சுட்டுக் கொன்றவர்கள் உட்பட 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்று பழி தீர்த்துள்ளது. காஷ்மீரின் அனந்த்நக் மாவட்டம் பிஜ்பிஹராவின் கோரிவன் பகுதியில் கடந்த 9ம் தேதி ராணுவ வீரரான ஹவில்தார் முகமது சலீம் அகூன், அவரது வீட்டின் முன்பாக தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் அவரை கொன்றதாக தகவல் கிடைத்தது. அவர்கள் பிஜ்பிஹாராவின் செம்தான் பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.
நேற்று முன்தினம் இரவும் நேற்று காலையிலும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், ராணுவ வீரரை கொன்ற 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே போல், சோபியான் மாவட்டம், ஹாதிபோரா பகுதியில் நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதில், ஒரு தீவிரவாதி சரணடைய முயன்றபோது, மற்ற தீவிரவாதிகள் தடுத்துள்ளனர். இதை கேட்காமல் சென்றதால், சரணடைய முயன்ற தீவிரவாதி உட்பட 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.