×

கட்டப்பஞ்சாயத்தில் ரூ.3 லட்சம் அபராதம் விதித்த அதிமுக பிரமுகர் காதலி தற்கொலையை தொடர்ந்து காதலனும் தீக்குளித்து சாவு

கீழக்கரை: பணம் கேட்டு அதிமுக பிரமுகர் மிரட்டியதால், காதலி தீக்குளித்து தற்கொலை செய்த இரண்டே மாதத்தில் காதலனும் தீக்குளித்து இறந்தார். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே பனையங்காள் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன் (20). இவருக்கும் பூலாங்குளத்தை சேர்ந்த நம்புகலாவுக்கும் (19) கல்லூரியில் படித்த போது காதல் ஏற்பட்டது. இருவரும் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள். இதையறிந்த பி.கீரந்தை ஊராட்சி மன்ற தலைவியின் கணவரான அதிமுக பிரமுகர் அற்புதராஜ் பஞ்சாயத்து பேசி இருவரையும் பிரித்துள்ளார். அதோடு பிரவீன் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் நம்புகலா கடந்த பிப். 11ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதில் மனமுடைந்த பிரவீன் எலி மருந்து உட்கொண்டு பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு கீழக்கரை மருத்துவமனையில் சிகிச்சையளித்து அவரது தாய் புஷ்பம் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது பிரவீன் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அப்பகுதியினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தார். இது குறித்து பிரவீன் தாய் புஷ்பம், சிக்கல் காவல்நிலையத்தில் அளித்த புகாரில், ‘‘எனது மகன் சாவிற்கு அதிமுக பிரமுகர் அற்புதராஜ் தான் காரணம். அவர்தான் காதலர்களை பிரித்து விட்டார். இதனால் தான் என் மகன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டான்’’ என்று கூறியுள்ளார். இதுகுறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : AIADMK ,Kattapanchayam , AIADMK leader fined Rs 3 lakh in Kattappanchayam
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...