×

வேதாரண்யத்தில் 9,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வெயிலின் தாக்கத்தால் உப்பு உற்பத்தி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல் வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. இந்த தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மழைக்காலம் முடிந்தவுடன் கடந்த பிப்ரவரி மாதம் உப்பு பாத்திகள் சரி செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது . கடந்த 15 நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் உப்பளங்களில் உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

உற்பத்தி செய்யப்படும் உப்பு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஒரு டன் உப்பு தற்போது ரூ.800க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு வாரும் பணியில் தொழிலாளர்கள் காலை 5 மணி முதல் 10 மணி வரை  ஈடுபடுகின்றனர். ஒரே நேரத்தில் அதிக அளவு உற்பத்தி நடைபெறுவதால் ஆள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இருந்த பொழுதிலும் வேலை தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதால் இந்த தொழிலை நம்பி உள்ள தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Vedaranyam , Intensity of salt production in 9,000 acres in Vedaranyam
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்