×

குப்பை, இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் பாழாகும் புழல் ஏரி தண்ணீர்: பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்குமா?

ஆவடி: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. ஏரிக்கரை செங்குன்றம், புழல், சூரப்பட்டு, சண்முகபுரம், முருகாம்பேடு, கள்ளிக்குப்பம், பானுநகர், வெங்கடேஸ்வரா நகர் விரிவு, திருமுல்லைவாயல், ஆரிக்கம்பேடு மற்றும் பொத்தூர் வரை செல்கிறது. புழல் மற்றும் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையங்களில் ஏரி தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அங்கிருந்து டேங்கர் லாரி மற்றும் குழாய்கள் மூலம் சென்னை மாநகர மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை பொதுமக்கள் சுட வைத்து குடிக்கலாம் என மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆனால் அப்படிப்பட்ட குடிநீர் உற்பத்தியாகி வரும் புழல் ஏரியில் என்ன நடக்கிறது என்று பார்த்தால் நிச்சயம் சுட வைத்து குடிக்க கூட மனம் இடம் கொடுக்காது. அந்த அளவுக்கு மோசமாக உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது; செங்குன்றம், அம்பத்தூர், புழல் பகுதிகளில் புழல் ஏரிக்கரை கழிப்பிடமாக மாறியுள்ளது. ஏரிக்கரையில் மலம், சிறுநீர் கழிப்பதால் இவைகள் எல்லாம் ஏரி நீரில் கலந்து விடுகிறது. கள்ளிக்குப்பம், முருகாம்பேடு, சூரப்பட்டு, ஆரிக்கம்பேடு, லெட்சுமிபுரம் ஆகிய இடங்களில் வாகனங்களை கழுவுவது, மாடுகளை குளிப்பாட்டுவது, துணி துவைப்பது மற்றும் குளிப்பது போன்ற செயல்கள் நடக்கின்றன.  அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரகடம்,  வெங்கடேஸ்வரா நகர், பானு நகர், பழனிப்பா நகர், கிழக்கு பானு நகர், மேற்கு பானு நகர்  மற்றும்  திருமுல்லைவாயல் பகுதிகளில் இருந்து வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் கால்வாய் மூலம் ஏரியில் கொண்டு விடப்படுகிறது. புழல் ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் ஏரியில் கலக்கின்றன. இதனால் ஏரி தண்ணீர் மாசடைந்து வருகிறது.

இந்த பிரச்னை ஒருபுறம் இருக்க, சமீப காலமாக கட்டிட இடிபாடுகள், இறைச்சி கழிவுகள், வீட்டு குப்பை மற்றும் வெட்டிய மரங்கள், இளநீர் ஓடுகள், கரும்பு கழிவுகள் உள்ளிட்டவைகளை புழல் ஏரியில் கொட்டி வருகின்றன. இவ்வாறு, ஏரியில்  கழிவுகளை டன் கணக்கில் கொட்டியுள்ளதால் நீர் மாசடைவதுடன் விஷத்தன்மையாக மாறும் அபாயம் உள்ளது. இதனால் தண்ணீரை குடிக்கும் சென்னை மக்களுக்கு  பல்வேறு விதமான நோய்கள் தாக்கும் ஆபத்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு புகார் செய்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால் தொடர்ந்து கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

அதிகாரிகள் வேடிக்கை
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’புழல் ஏரியில் கழிவுநீர் விடுதல், இறைச்சி கழிவுகள், வாகனங்களை கழுவுதல், துணி துவைத்து குளிப்பது, இயற்கை உபாதைகளை கழிப்பது போன்றவைகளால்  தண்ணீர் மாசடைந்து வருகிறது. இந்த தண்ணீரை சுத்திகரித்து கொடுத்தாலும் மக்களுக்கு பல விதமான உடல் உபாதைகளும் ஏற்பட்டு தான் வருகிறது. இவற்றை தடுக்க வேண்டிய அதிகாரிகள் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகின்றனர்’ என்றனர்.

Tags : Garbage, meat waste, stinging, roaring lake, water
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்