சின்னாளபட்டி: ஆத்தூர் மல்லையாபுரம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கடமானை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டு காட்டில் விட்டனர். ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மல்லையாபுரம் - நெலப்பாறைப்பகுதியில் புலிப்பாண்டிக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்ததோட்டத்தில் தண்ணீர் தேவைக்காக 12 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியை கட்டியுள்ளார். இத்தொட்டியில் வனவிலங்குகள் விரட்டியதில் தப்பி வந்த 135 கிலோ எடை உள்ள கடமான் தவறி விழுந்துவிட்டது.
இதுகுறித்து உடனடியாக ஆத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தோட்டத்து உரிமையாளர் தகவல் தெரிவித்தார். ஆத்தூர் தீயணைப்பு துறையினர் நிலைய அலுவலர் (பொறுப்பு) புனிதராஜ், தீயணைப்போர் கார்த்தீஸ்வரன், அழகேசன், ராஜ்பரத், வேல்பாண்டி, தன்னார்வளர் ஆமோஸ் ஆகியோர் விரைந்து வந்து தண்ணீருக்குள் இறங்கி கடமானை மீட்டனர். இதன் பின் அதை பத்திரமாக காட்டிற்குள் விட்னர்.