புதுச்சேரி: அரக்கோணத்தில் 2 தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி சுதேசி மில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி அளித்த பேட்டி:
அரக்கோணம் சோகனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பானை சின்னத்தில் வாக்கு சேகரித்த இரண்டு தலித் இளைஞர்களை கொடூரமாக படுகொலை செய்துள்ளனர். இதில் அதிமுக, பாமகவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால் காவல்துறை இதனை மூடி மறைத்து கொலைக்கு சம்பந்தம் இல்லாத ஒருசிலரை கைது செய்து நாடகமாடுகிறது. தன்னுடைய அரசியல் லாபத்துக்காக பாமகவுடன் கூட்டணி சேர்ந்துகொண்டு சாதி வெறியை தூண்டிவிடுவதில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். அதனுடைய வெளிப்பாடுதான் இந்த படுகொலை. அதிமுக, பாமக, பாஜகவினர் இந்த படுகொலையை ஏன் கண்டிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.