×

3 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள வாக்கு இயந்திரங்கள் அசைந்திருந்தால் பணியில் இருப்பவர்களிடம் விசாரணை

வேலூர்: மூன்று அடுக்கு பாதுகாப்புடன் இருட்டறைகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் அசைந்திருந்தால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்களிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 6ம் தேதி தேர்தல் நடந்தது. இதையடுத்து வாக்குகள் பதிவான இயந்திரங்கள் பாதுகாப்பு மையங்களில் இருட்டறைகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த பாதுகாப்பு மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வாக்கு பதிவான இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு சீல் வைப்பதற்கு முன்பு, தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் முழுவதுமாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது, சீல்கள் அகற்றப்பட்டவுடன் உள்ளே உள்ள இயந்திரங்களை உடனடியாக எடுக்கக்கூடாது. வாக்குப்பதிவான இயந்திரங்கள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும். இதையடுத்து இயந்திரங்களை எடுக்க வேண்டும் என தேர்தல் பார்வையாளர்கள் கூறியுள்ளனர்.

தொடர்ந்து சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், சீல் வைப்பதற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவுடன், சீல் அகற்றப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒப்பிட்டு பார்க்கப்படும். அதன்படி, இருட்டறைகளில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம் மாறியிருந்தாலோ, அசைந்திருந்தாலோ தேர்தல் அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Voting machines
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்!