மதுரை: கட்டாய மதமாற்ற தடை சட்டத்தின் விதிகளை உருவாக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கிறிஸ்தவ மிஷனரி அமைப்புகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு என தனியாக வாரியத்தை அமைக்கக் கோரி, இந்து தர்மா பரிஷத் அமைப்பின் நிர்வாக டிரஸ்ட்டி ரமேஷ் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் கோரும் நிவாரணத்தின் பேரில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இது மாநில அரசின் எல்லைக்கு உட்பட்டது. அதேநேரம் அரசுத் தரப்பில், கட்டாய மதமாற்றத்தை தடுத்திடும் வகையில் சட்டம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சட்டத்தை அமல்படுத்திடும் வகையில் தேவையான விதிகளை உருவாக்க வேண்டும். சட்டத்தின்படியான நடவடிக்கையை மாவட்ட கலெக்டர்கள் மேற்கொள்வார்கள் என இந்த நீதிமன்றம் நம்புகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.