×

சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை: புதிய கட்டுப்பாடுகளை விதித்தது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு 10.4.2021 முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, கீழ்க்கண்ட புதிய கட்டுப்பாடுகளும்/ தளர்வுகளும், 11.4.2021 முதல் நடைமுறைப் படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதிய கட்டுப்பாடுகள்:

* சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களிலுள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், சனி, ஞாயிறு மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களிலும், பொதுமக்கள் கூடுவது 11.4.2021 முதல் தடைசெய்யப்படுகிறது.

 புதிய தளர்வுகள்:

* அனைத்து வழிபாட்டுத்தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்ய, இரவு 8.00 மணி வரை அனுமதிக்கப்படும் என்ற கட்டுப்பாடு, தற்போது, சம்பந்தப்பட்ட வழிபாட்டுத்தலங்களுடைய வழக்கமான நேரம் வரையிலேயோ அல்லது அதிகபட்சம் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் வழிபாட்டிற்காக, அரசு வெளியிட்ட நிலையான வழிமுறைகளைப் பின்பற்றி அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.

* இந்த காலகட்டத்தில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்கள், முதல் ஏழு நாட்களுக்கு மட்டும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட காட்சிகளை விட கூடுதலாக ஒரு காட்சி, அரசு வெளியிடும் நிலையான வழிகாட்டு முறைகளை பின்பற்றியும், அனைத்து காட்சிகளிலும் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்தி திரையிட அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும், முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : TN ,Marina Beach , Saturday, Sunday, Beach Area, Holidays, Government of Tamil Nadu
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...