புதுச்சேரி : புதுச்சேரியில் விளை பொருட்கள் அதிக விலைக்கு போவதால் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு தமிழக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்கள் வரத்து அதிகரித்துள்ளது. புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் புதுச்சேரி மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளான விழுப்புரம், மரக்காணம், திண்டிவனம், கடலூர் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
தேர்தல் விதிமுறை கெடுபிடி, போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் கடந்த சில வாரங்களாக விளைபொருட்களை கொண்டு வராமல் இருந்தனர். தற்போது தேர்தல் முடிந்து சகஜ நிலை திரும்பியுள்ளதால் விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வருகின்றனர். நேற்று 1000க்கும் மேற்பட்ட மணிலா மூட்டைகளை விவசாயிகள் எடுத்து வந்திருந்தனர்.
அதிகபட்சமாக அவை ரூ.2,500 முதல் ரூ.2,700 வரை (40 கிலோ மூட்டை) விலை போனது. இதேபோல் பச்சை பயறு ரூ.7,500 வரை, காராமணி ரூ.8,500 வரையும் விலை போவதால் விவசாயிகள் அதிகளவில் புதுச்சேரியில் விற்பனை செய்ய ஆர்வம் காட்டினர். ஒவ்வொரு பயிர்களும் அவற்றின் தரத்திற்கேற்ப விலை போவதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.