கோலார்: அனைத்து வகுப்பினரும் கூடி வாழும் நந்தவனமாக இருக்கும் இந்தியாவை மதவாத அரசியல் மூலம் சீர்குலைக்கும் முயற்சியை மத்தியில் ஆளும் பாஜ அரசு மேற்கொண்டு வருவதாக முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா குற்றம்சாட்டினார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, நாட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை வகுப்பினரின் பாதுகாப்பு கேடயமாக இருப்பது காங்கிரஸ் கட்சி மட்டுமே. மத்தியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆட்சி நடத்தியதின் பயனாக சமூகத்தில் ஒடுக்கப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு பொருளாதார மேம்பாடு, அரசியல் வளர்ச்சி, சமூகநீதி ஆகியவை கிடைத்தது. காங்கிரஸ் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருந்திருந்தால், அஹி்ந்தா பிரிவில் வரும் வகுப்பினரின் வாழ்வாதாரம் பூஜ்யமாகி இருக்கும்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, 20ம் அம்ச திட்டம் அறிமுகம் செய்தபோது, நாட்டில் இயங்கிவந்த தனியார் வங்கிகளை தேசியமயமாக்கினார். பல தனியார் தொழிற்சாலைகளை பொதுத்துறை நிறுவனமாக மாற்றினார். இதனால் இடஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் குடும்பங்கள் வளர்ச்சி அடைந்தது. தற்போது ஆளும் பாஜ அரசு, பொதுத்துறை நிறுவனங்களை மீண்டும் தனியார்மயமாக்கியும், நல்ல லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசி உள்பட இன்சூரன்ஸ் கம்பெனிகள், வங்கிகளை தனியார்மயமாக்கி வருகிறது. மத்திய அரசின் பிற்போக்கு பார்வை காரணமாக தாழ்்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் மீண்டும் காலணி ஆதிக்கத்தின் கீழ் வரும் சூழ்நிலைைய உருவாக்கி வருகிறது. ரயில்வே, தொலைபேசி உள்ளிட்ட நிறுவனங்களும் தனியாரிடம் ஒப்படைப்பதால், லட்சக்கணக்கானோர் ேவலை இழக்கும் நிலை ஏற்படும்.
இதனால் ரத்த புரட்சி ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த சூழ்நிலையை மத்தியில் ஆளும் பாஜ அரசு ஏற்படுத்தி கொடுக்ககூடாது. இந்திய மதசார்பற்ற நாடு என்பதை நமது அரசியலமைப்பு சட்டம் தெளிவுப்படுத்தியுள்ளது. மக்கள் அவர்கள் விரும்பும் மதத்தை சேரவும் வழிப்படவும் யாரும் தடுக்க முடியாது. இந்து மதத்தில் தான் இருக்க வேண்டும் என்று சட்டம் போட்டு தடுக்கவும் முடியாது. இதை புரியாமல் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கிறோம் என்ற மமதையில் நாட்டை இந்துத்வா அடிப்படையில் ெகாண்டு செல்லும் முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றார்.