×

வாக்குப்பதிவு இயந்திரத்தை பைக்கில் கொண்டு சென்ற விவகாரம் மாநகராட்சி உதவி பொறியாளர் உட்பட 4 பேருக்கு சம்மன்: வேளச்சேரி போலீசார் உத்தரவு

சென்னை: வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள இந்திரா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் இயந்திரத்தை எடுத்து சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். வேளச்சேரி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தேர்தல் ஆணைய அதிகாரிகளும் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் என தெரியவந்தது.மேலும் இந்த இயந்திரம் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரியவந்தது. இருந்தாலும் கவனக்குறைவாகவும், அலட்சியமாகவும் பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டு சென்றதால் சென்னை தேர்தல் அதிகாரி பிரகாஷ் உத்தரவுபடி இரண்டு மாநகராட்சி ஊழிர்கள், ஒரு மெட்ரோ வாட்டர் பணியாளர் உட்பட 3 பேர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், வேளச்சேரி தொகுதி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், பைக்கில் வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்தது தொடர்பாக விசாரணை நடத்த இந்திரா பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவி பொறியாளர் செந்தில்குமார், ஊழியர்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வாசுதேவன் உட்பட 4 பேர் வரும் 12ம்தேதி காலை 10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும் படி வேளச்சேரி போலீசார் 4 பேருக்கும் சம்மன் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே, சம்பவத்தன்று வாக்குப்பதிவு இயந்திரத்தை அலட்சியமாக கொண்டு சென்ற ஊழியர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட வேளச்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை ஜ.ஜி.தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என்று வேளச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Velachery police issue summons to 4 persons, including a corporation assistant engineer, for taking the voting machine by bike
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...