×

விசாரணை நடத்தாமல் கைது நடவடிக்கை 2 போலீசாருக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில் வசிப்பவர் ஞானசேகரன். வங்கி அதிகாரியான இவர், 2012ம் ஆண்டு மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எனக்கும் எனது மனைவி அம்சவள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் ஆத்திரமடைந்து, ஒருநாள் அவர் வீட்டை விட்டு வெளியேறினார். இதை தொடர்ந்து அன்றைய நாள் இரவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலையடுத்து, அதிர்ச்சியடைந்த நான் பிரேத பரிசோதனை அறிக்கை பெற அண்ணா சதுக்கம் காவல் நிலையத்திற்கு சென்றேன்.

அங்கு இருந்த எனது மனைவியின் சகோதரர் விநாயகமூர்த்தி, தற்கொலைக்கு நான்தான் காரணம் என்று புகார் கொடுத்திருந்தார். அப்போது, எனது விளக்கத்தை போலீசார் கேட்கவில்லை. ஆனால், உண்மையில் எனது மனைவிக்கும், திண்டிவனத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்தது. ஆனால், போலீசார் லஞ்சம் பெற்றுக்கொண்டு எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்து எந்தவித முன்னறிவிப்புமின்றி என்னை கைது செய்தனர். எனவே மனித உரிமை மீறிலில் ஈடுபட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று புகார் அளித்திருந்தார்.

இதனை விசாரித்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது, போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, ஞானசேகரனுக்கு ரூ.1.5 லட்சத்தை 8 வாரங்களுக்குள் உள்துறை கூடுதல் தலைமை செயலர் இழப்பீடாக வழங்க வேண்டும். அந்த தொகையை அப்போது அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் ஞானசெல்வத்திடம் ரூ.1 லட்சம் மற்றும் உதவி ஆய்வாளர் வள்ளிநாயகத்திடம் ₹50 ஆயிரம் வசூலித்துக் கொள்ளலாம். மேலும், அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.


Tags : Human Rights Commission , Arrest without investigation 2 Police fined Rs 1.5 lakh: Human Rights Commission orders
× RELATED தேர்தலில் இஸ்லாமியர்களுக்கு எதிராக...