புதுடெல்லி: இந்தியா - இலங்கை உளவு மற்றும் காவல் துறை தலைவர்களின் முதல் கலந்துரையாடல் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகளாவிய தீவிரவாத அமைப்புகள் மற்றும் தப்பியோடிய தீவிரவாத குழுக்கள் எங்கு செயல்பாட்டில் இருந்தாலும், அவர்களுக்கு எதிராக கூட்டாக இணைந்து நடவடிக்கை எடுப்பதற்கு இந்தியாவும், இலங்கையும் முடிவு செய்துள்ளன. இருநாடுகளுக்கும் உள்ள பாதுகாப்பு சவால்களை இணைந்து எதிர்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கடல் பாதையில் கடத்தலில் ஈடுபடுவோர் குறித்த உளவுதுறை தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.