×

தமிழகத்தில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் திருவிழா, மதக் கூட்டங்களுக்கு தடை

* திரையரங்குகளில் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி
* பஸ்களில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை
* கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கு தடை
* கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை


சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் ஊரடங்கு தளர்வுகள் நாளை முதல் கடுமையாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொழுதுபோக்கு பூங்கா, திரையரங்குகளில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரம் தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்துகளில் நின்று பயணம் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 3,500ஐ கடந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பது குறித்து தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நேற்று முன்தினம் சென்னை, தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு தளர்வுகளுடனும் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளுடன், 30.4.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகள் தொடர்ந்து அமலில் இருக்கும். தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருவதையும், பொதுமக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, நோய் தொற்றை கட்டுப்படுத்த ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுக்கு முற்றிலுமாக தடை விதிப்பதும், ஒரு சில செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிப்பதும் அவசியமாகிறது. எனவே மறு உத்தரவு வரும் வரை கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.  
* தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும்.
* நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10ம் தேதி (நாளை) முதல் தடை விதிக்கப்படுகிறது.
* நாளை முதல் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்படுகிறது. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.மேலும், ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு ஒரு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் நாளை (10ம் தேதி) முதல் அமலுக்கு வரும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, மாவட்டங்களுக்கு இடையேயான அரசு பொது மற்றும் தனியார் பேருந்து மற்றும் பெருநகர சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம்  செய்ய அனுமதி இல்லை.  

* புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகம் செல்லும் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். பேருந்துகளில் நின்று கொண்டு பயணம்  செய்ய அனுமதி இல்லை.
* முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரு நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11  மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.  
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 சதவீத இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும்.   
* கேளிக்கை விடுதிகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

* பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், உயிரியியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* ஒன்றுக்கு மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்க வளாகங்கள், வணிக வளாகத்தில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீத இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி செயல்பட அனுமதிக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, உள் அரங்கங்களில் மட்டும் அதிகபட்சமாக 200 பேர் மட்டும் பங்கேற்கும் வண்ணம், சமுதாயம், அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் விழாக்கள் அனுமதிக்கப்படும்.
* திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படும்.
* விளையாட்டு அரங்கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில், பார்வையாளர்கள் அனுமதியின்றி விளையாட்டு போட்டிகள் நடைபெற அனுமதிக்கப்படும்.

* நீச்சல் குளங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, விளையாட்டு பயிற்சிகளுக்கு மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
* நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, பொருட்காட்சி அரங்கங்கள் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.
* 31.8.2020 அன்று அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணி வரை அனுமதிக்கப்படும். இருப்பினும், அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை.
* சின்னத்திரை மற்றும் திரைப்பட தொழிலுக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். இருப்பினும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் சின்னத்திரை / திரைப்பட கலைஞர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு, தடுப்பூசி போட்டு கொண்டு படப்பிடிப்பில் கலந்து கொள்வதை சின்னத்திரை மற்றும் திரைப்பட படப்பிடிப்பு நிர்வாகங்கள் உறுதி செய்ய வேண்டும்.  

* வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து மூன்று பயணிகள் மட்டும் செல்லலாம்.
* ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க முடியும்.
* வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து (புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா தவிர) தமிழ்நாட்டிற்கு வரும் நபர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்த பகுதிகளில் இருந்து வெளியில் வராத வகையில், காவல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதார துறை ஊழியர்களை கொண்டு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
* கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், அரசு மருத்துவ நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இரண்டு வாரத்திற்குள்ளாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , Restrictions on festivals and religious gatherings in Tamil Nadu from tomorrow
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...