×

தனுஷ் நடிப்பில் நாளை வெளியாகும் 'கர்ணன்'திரைப்படம்: புதுச்சேரியில் நடுக்கடலில் பேனர் வைத்துள்ள ரசிகர்கள் !

புதுச்சேரி: தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் தனுஷின் ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்துள்ளனர். புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது நடுக்கடலில் பேனர் வைக்க ரசிகர்கள் போட்டியிடும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. அஜித், சிம்புவைத் தொடர்ந்து தனுஷின் ரசிகர்களும் தற்போது வைத்துள்ளனர். புதுவை மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்தது புதுவை கடற்கரை. புதுச்சேரியின் கடற்கரையில்தான் கடந்த 1861-ம் ஆண்டு கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரையில் இருந்து கடல் நோக்கி 192 மீட்டர் நீளத்துக்கு பாலம் அமைந்தது.

மேலும், 6 ஆண்டு பணிகள் நடந்தது. 1866-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கடல் பாலம் திறக்கப்பட்டது. 1952-ல் வீசிய புயலில் புதுவை துறைமுகமும், கடல் பாலமும் முற்றிலும் மறைந்து போனது. தற்போது, காந்தி சிலைக்குப் பின்னே சிறு கம்பிகளாக கடல் பாலத்தின் சாட்சிகளாக உள்ளன அக்கால கம்பிகள். இக்கம்பிகள் தற்போது பேனர் கட்ட பயன்படுத்துகின்றனர். அபாயகரமான முறையில் படகில் சென்று பேனரை பலரும் கட்டுகின்றனர். இது அபாயகரமான முறை என்றாலும் அதை பலரும் செய்கின்றனர். புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது பலரும் பேனர்களை வைத்து தங்களின் பலத்தை நிரூபிப்பது வழக்கம்.

ஏற்கெனவே அஜித், சிம்பு, தனுஷ் ரசிகர்கள் படகில் சென்று பேனர்களை அங்கே கட்டுவது வழக்கமாக இருந்தது. அதை போலீஸார் மீனவர் உதவியுடன் அகற்றுவதும் வழக்கம். தற்போது நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையடுத்து, அதனை கொண்டாடும் வகையில் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் கடலில் உள்ள இரும்பு தூண்களில் அவரது படத்தின் பேனரை கட்டியுள்ளனர். படகு மூலம் சென்று அங்கே நீரில் இறங்கி படத்தின் பேனரை கட்டி உள்ளதாக குறிப்பிடுகின்றனர்.

Tags : Dhanush, Karnan, movie, fans
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை அரசு பள்ளிகளில்...